Thursday, March 1, 2018

ஈழத்தமிழரை புகழ்ந்து தமிழகத்தமிழரை இகழ்வது ஆபத்தானது

ஈழத்தின் மக்கட்தொகையில் 18 விழுக்காட்டுக்கும் மேலாக இருந்த தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிரிகள் சிங்கள ஆதிக்கவாதிகளே. சிங்களர்கள் 70 விழுக்காட்டுக்கு மேலாக இருந்தாலும் அதில் ஆதிக்க மணப்பாங்கை கொண்டோரின் எண்ணிக்கை 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தது. அதை விட முக்கியமான ஒன்று எந்த சிங்களனும் தன்னை தமிழன்னு சொல்லி ஈழத்தில் ஏமாத்துனதில்லை. அதனால் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத்தில் எதிர்கொண்ட சவால்கள் என்பது தமிழகத்தமிழர் எதிர்கொண்ட சவால்களை விட மிகமிகக்குறைவு.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மீட்புப்படை என்னும் ஆயுதப்படை நடத்திய அண்ணன் இரவிச்சந்திரன் எதிர்கொண்ட ஆபத்துகள் என்பது விடுதலைப்புலிகளின் பிரபாகரன் எதிர்கொண்டதை விட பல மடங்கு அதிகம்.
அண்ணன் இரவிச்சந்திரன் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மீட்புப்படை தொடங்கிய காலம் 1970களின் கடைசிப்பகுதியாகும். அதற்கு முன்னர் தமிழ்நாடு மாநிலத்துக்கு மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பு, இந்தித்திணிப்பு எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, தமிழ்த்தேச கோரிக்கை, இயற்கை வளங்கள் பகிர்வில் அண்டை மாநிலங்களின் ஆதிக்கம், கனிம ஆற்றல் வளங்களை பெறுவதில் அண்டை மாநிலங்களும் வடயிந்தியாவும் தமிழ்நாடின் மீது செலுத்திய ஆதிக்கம் என பல காரணங்களால் அண்டை மாநில மக்களிடையேயும் வட இந்திய மக்களிடையேயும் பலத்த எதிர்ப்பு இருந்தது. இது போதாதுன்னு தமிழ்நாடு வாழ் பிறமொழியாளர்கள் தங்களை மனிதம், கம்யூனிசுட்டு, இந்து, திராவிடர், தலித்து என்ற பொது அடையாளங்களில் எல்லாம் மறைத்துக்கொண்டு தமிழர்களை தமிழர்களுக்கு தெரியாமலே ஆதிக்கம் செய்து வந்தனர். இந்திய உளவுத்துறை சிங்கள உளவுத்துறையை விட பல மடங்கு பலமானது. இந்தியாவும் அரசியல் ஆதிக்கத்தில் சிங்களத்தை விட பன்மடங்கு உலக அரசியலில் பலமானது. இந்தியாவில் தமிழரின் மக்கட்தொகை 6 விழுக்காடே ஆகும். இதைப்போன்ற பல சிக்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து பார்த்தால் தமிழகத்தமிழரின் எதிரிகள் ஈழத்தமிழர்களின் எதிரிகளை விட தொகை பலத்திலும், புத்தி பலத்திலும் 100 மடங்கு ஆபத்தானவர்கள். ஆக ஈழத்தமிழரை விட ஏன் சிங்கப்பூர், மலேசியா, போன்ற புலம்பெயர் தமிழர்களை விட தமிழகத்தமிழர்கள் எந்தவிதத்திலும் இன உணர்விலோ இனப்போராட்டங்களிலோ குறைவானவர்கள் அல்ல. அதனால் இனி ஈழத்தமிழரை புகழ்ந்து தமிழகத்தமிழரை இகழும் போக்கையோ அதை ஆதரிக்கவோ வேண்டாம்.

No comments:

Post a Comment